×

பிஞ்சு போன செருப்பு என விமர்சனம்; இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்திய அண்ணாமலை: பல்வேறு தரப்பினர் கண்டனம்

சென்னை: பிஞ்சு போன செருப்பு என்று இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசி பிரசாரம் செய்த தமிழக பாஜ தலைவர் அண்ணாமலைக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனம் எழுந்துள்ளது. பெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் தமாகா வேட்பாளர் வேணுகோபாலை ஆதரித்து தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை நேற்று முன்தினம் பிரசாரம் செய்தார். அப்போது, அண்ணாமலை பேசுகையில், ‘‘1980ல் பேசிய அதே விஷயத்தை சம்பந்தமே இல்லாமல் இன்றைக்கும் பேசுகிறார்கள்.

இந்தி, சமஸ்கிருதம், வடக்கு தெற்கு என பேசிக் கொண்டிருக்கிறது திமுக. இன்னும் அந்த பிஞ்சு போன செருப்பை அவர்கள் தூக்கி எறியவில்லை’’ என்று பேசினார். இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஏராளமானோர் தங்கள் இன்னுயிரை ஈந்த நிலையில், இந்தி எதிர்ப்பு போராட்டத்தை பிஞ்சு போன செருப்பு எனக் குறிப்பிட்டு அண்ணாமலை பேசியுள்ளதாக கண்டனங்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக, பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜன் கூறியதாவது: பிரதமர் மோடி இங்கு வரும்போதும், வெளிநாடுகளிலும் தமிழ் பற்றி உயர்வாகப் பேசுகிறார்.

ஆனால், இங்கேயே இருக்கும் அண்ணாமலை கேவலமாகப் பேசுகிறார். சந்தர்ப்பத்திற்கு தகுந்த தகுந்தவாறு, பாஜவினர் மாறிக் கொள்வார்கள். தமிழ்நாடு கொடுக்கும் வரியால் இந்தியை தூக்கி சுமக்கும் உத்தர பிரதேசத்திற்கு அதிக நிதி வழங்கப்படுகிறது. தமிழ்நாடு உற்பத்தியில் இரண்டாவது பெரிய மாநிலமாக இருப்பதற்கு காரணம் இந்தியை அன்றைக்கு ஒதுக்கி வைத்ததால் தான். இவ்வாறு அவர் கூறினார். ஒட்டுமொத்த தமிழ்நாடும் நடத்திய இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்துவதா என அண்ணாமலைக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

The post பிஞ்சு போன செருப்பு என விமர்சனம்; இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்திய அண்ணாமலை: பல்வேறு தரப்பினர் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Annamalai ,Chennai ,Tamil Nadu ,BJP ,president ,Tamaka ,National Democratic Alliance ,Perumbudur ,-Hindi ,
× RELATED பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை...